சுற்றுலா தொழில் முனைவோர் தமிழக சுற்றுலாத் துறையில் வரும் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் செயல்பட்டுவரும் சுற்றுலா சார்ந்த தொழில்முனைவோர் மற்றும் புதிதாக சுற்றுலா தொழில் தொடங்க உள்ளவர்கள், தமிழக அரசின் சுற்றுலாத் துறையில் கட்டாயமாக தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அதன்படி, சுற்றுலா சார்ந்த தொழில் முனைவோர்களான படுக்கை மற்றும் காலை உணவுவழங்குபவர்கள், தங்கும் விடுதிகள், வீடுகளை வழங்குபவர்கள், சாகச சுற்றுலாக்களை நடத்தி வருபவர்கள், கேரவன் சுற்றுலா மற்றும் கேரவன் பூங்காக்களை நடத்தி வருபவர்கள் உள்ளிட்டோர் https://www.tntourismtors.com/ என்றசுற்றுலாத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வரும் 31-ம் தேதிக்குள் தங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்ய தவறுபவர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது தொடர்பான கூடுதல் விவரங்களை சென்னை தமிழ்நாடு சுற்றுலா வளாகத்திலும், 044 25333358, 7550009331 என்ற தொலைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.