‘தாட்கோ’ மூலம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி – Tahdco
‘தாட்கோ’ மூலம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட உள்ளது என, கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மூலம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில், தற்போது சென்னையில் உள்ள, ‘ஸ்மைல் ஸ்கில்’ இந்தியா பயிற்சி நிலையம் மூலம், திறன்பேசி தொழில் நுட்பவியலாளர் பெண்களுக்கும் மற்றும் உற்பத்தி ஊழியர் பயிற்சி ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும், ‘தாட்கோ’ சார்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.இப்பயிற்சியில் சேர, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும். பத்தாம் வகுப்பு படித்த, 18 முதல், 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு, 12 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிப்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
மேலும், இப்பயிற்சி பெற்றவர்கள் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பயிற்சியை முடிப்பவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளம், 18,000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். இப்பயிற்சி பெற, www.tahdco.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான தங்கும் விடுதி மற்றும் பயிற்சி கட்டணம், ‘தாட்கோ’ வழங்கும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.