ஏழை இந்து குடும்பங்களை சேர்ந்த, இளைஞர், இளம்பெண்களுக்கு, இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசை வழங்கும் திட்டத்தை, இந்து சமய அறநிலையத்துறை செயல்படுத்தி வருகிறது. ஒரு ஜோடிக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது.
ஒரு மண்டலத்துக்கு, 30 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு கோவிலிலும், அறிவிப்பு செய்து, விண்ணப்பம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருமண ஏற்பாடு செய்து வரும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள், இலவச திருமண திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். மணமக்களுக்கு வழங்கப்படும் திருமாங்கல்யம் மற்றும் சீர்வரிசை பொருட்கள் பட்டியலுடன், கோவில்களில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
திருமண ஜோடிக்கு, 20 ஆயிரம் மதிப்புள்ள, நான்கு கிராம் திருமாங்கல்யம், புத்தாடைகள், பீரோ, கட்டில், மெத்தை, கைக்கடிகாரம், மிக்ஸி, பூஜை பொருள் உட்பட பாத்திர வகைகள் வழங்கப்படும். திருமணத்தன்று, மணமகன் மற்றும் மணமகள் குடும்பங்களை சேர்ந்த, 20 நபர்களுக்கு திருமண விருந்தும் அளிக்கப்பட உள்ளது.
திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, திருப்பூர் இணை கமிஷனர் மண்டலத்தில், இந்தாண்டு, 30 ஜோடிகளுக்கு திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இலவச திருமண திட்டத்தில், திருமணம் செய்ய விரும்பும் மணமக்கள், கோவில் அலுவலகங்களில் விண்ணப்பத்தை பெற்று விண்ணப்பிக்கலாம் என, இந்து சமய அறநிலையத்துறை அழைப்பு விடுத்துள்ளது.