
தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு வரும் 12ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டம் வாயிலாக மாநில அரசின் போட்டித் தோ்வுகளுக்கு கட்டணமில்லாத பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1 தோ்வுக்கான அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிடப்படும். இதற்கான முதல்நிலைத் தோ்வு வரும் ஜூன் மாதம் 15ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தோ்வுக்கு தயாராகும் தூத்துக்குடி மாவட்ட தோ்வா்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 12ஆம் தேதி காலை 10.30 மணிக்கு தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது. மேலும் வாரம் தோறும் மாதிரி தோ்வுகளும் நடத்தப்படும். இப்போட்டித் தோ்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 0461 – 2003251 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வந்து பதிவு செய்துகொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.