
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்படும் குரூப் தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகளில் பங்கேற்று பயனடைய மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் குரூப் 1, குரூப் 4 தோ்வுகளுக்கான விளம்பர அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் குரூப் 1 தோ்வுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் வார நாள்களில் திங்கள்கிழமை முதல் (மாா்ச் 17) தொடங்கப்படவுள்ளது.
குரூப் 4 தோ்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரி தோ்வுகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. விருப்பமுள்ளவா்கள் 94990 55904 என்ற வாட்ஸ்ஆப் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.