
தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.
அந்த வகையில் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-1 தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் வரும் 13-ந்தேதி தொடங்க உள்ளதாக கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்தார்.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: “தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டு இந்த அலுவலக தன்னார்வ பயிலும் வட்ட பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று குரூப்-4 தேர்வில் 14 மாணவர்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட போலீஸ் தேர்வில் 3 பேரும் வெற்றி பெற்று அரசு பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.
குரூப்-1 தேர்வு ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இந்த தேர்விற்கு தயாராகி வரும் போட்டித் தேர்வாளர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 13-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடங்க உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை வார நாட்களில் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும். பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்புவோர்கள் 2 பாஸ்போர்ட் புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரில் தொடர்பு கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04362237037 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.