தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு தகுதியான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா். தமிழக அரசின் 2022-23 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுக்கு தகுதியான பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவையில் கடந்த 2022-23 ஆம் ஆண்டுக்கான அறிவிப்பின்போது, ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்களது வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக மாற்றும் சிறந்த பள்ளிகள், சிறந்த கல்லூரிகள் மற்றும் சிறந்த வணிக வளாகங்களுக்கு மஞ்சப்பை விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி கைப்பைகளுக்கு மாற்றாக மஞ்சள் துணி பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் 3 சிறந்த பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக வளாகங்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இதில், முதல் பரிசாக ரூ.10 லட்சமும், இரண்டாவது பரிசாக ரூ.5 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப்படும். இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் நெகிழி இல்லாத வளாகங்களாக மாற்ற ஊக்குவிப்பதில் முன்மாதிரியாக் திகழும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிக வளாகங்கள் மஞ்சப்பை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக இணையதளத்தில் இருந்து பதவிறக்கம் செய்து மே 1 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பப் படிவத்தில் உள்ள இணைப்புகள் தனிநபா் அல்லது நிறுவனத் தலைவரால் கையொப்பமிட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட பிரதிகள் இரண்டு மற்றும் குறுவட்டு (சிடி) பிரதிகள் இரண்டையும் மாவட்ட ஆட்சியரிடம் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.