பேச்சாற்றல் மிக்கவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாயில் தொடங்கி ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கி கவுரவப்படுத்த காத்திருக்கிறது தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம்.
தமிழ், ஆங்கிலம் என தனித்தனியாக பேச்சுப்போட்டிகளை நடத்தவுள்ள இந்த ஆணையம், பேசுவதற்கு தேர்வு செய்ய வேண்டிய 15 தலைப்புகளையும் கொடுத்திருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
‘திராவிட மாடல் அரசு’ என்ற லட்சியத்தை தமிழக கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்க, தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் தமிழகத்திலுள்ள, அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை கடந்த ஆண்டைப்போலவே இவ்வாண்டிலும் நடத்த இருக்கின்றது.
கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் கலை மற்றும் அறிவியல், மருத்துவம், சட்டம். பொறியியல், தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்களைக் கடந்து மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும் தெரிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்கள் மத்தியில் விதைத்திடவும், நமது மொழி, பண்பாடு, இலக்கியம், கலைகள், வரலாறு ஆகியவற்றின் புரிதல்களையும், இன உணர்வினையும் அவர்கள் பெற்றிடவும் இப்போட்டிகள் வழிவகுக்கும்.
பேச்சுப் போட்டி விதிகள்:
- போட்டிகள் மாவட்ட அளவில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனித்தனியாக நடத்தப்படும்.
- மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் கலந்துக்கொள்ளும் மாநில அளவிலான போட்டி இறுதியில் நடத்தப்படும்.
- வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழுக்கும். ஆங்கிலத்திற்கும் தனித்தனியாக பரிசுகளும், சான்றிதழ்களும் கீழ்கண்டவாறு வழங்கப்படும்.
மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.20,000
மாநில அளவில் முதல் பரிசு ரூ.1,00,000
மாவட்ட அளவில் இரண்டாம் பரிசு ரூ.10,000
மாநில அளவில் இரண்டாம் பரிசு ரூ.50,000
மாவட்ட அளவில் மூன்றாம் பரிசு ரூ.5,000
மாநில அளவில் மூன்றாம் பரிசு ரூ.25,000
தமிழகத்திலுள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கலை மற்றும் அறிவியல், பொறியியல், மருத்துவம், சட்டம், வேளாண்மை, கால்நடை, பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் தமிழகப் பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி மாணவர்கள் போட்டிகளில் பங்கு பெற தகுதி உள்ளவர்கள்.
ஒவ்வொரு நிறுவனமும் தங்களது நிறுவனத்தின் சார்பாக தமிழுக்கும், ஆங்கிலத்திற்கும் தலா இரண்டு மாணவர்களை அனுப்பலாம்.
வருகின்ற 20.02.2023 ஆம் தேதிக்குள் மாணவர்களின் பெயர்களை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கு அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல்: smcelocution@gmail.com
அஞ்சல் முகவரி: திரு.D.ரவிச்சந்திரன் இ.ஆ.ப., , உறுப்பினர் செயலர், மாநில
சிறுபான்மையினர் ஆணையம், முதல் தளம், கலச மஹால், புராதன
கட்டிடம், சேப்பாக்கம், சென்னை 600005
போட்டியில் பங்கேற்கும் மாணவர்களது மின்னஞ்சல், அஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண் அனுப்பப்பட வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகள் பற்றிய அனைத்து தகவல்களும் சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சார்ந்த நிறுவனங்களுக்கும், மாணவர்களுக்கும் தனித்தனியாக அனுப்பிவைக்கப்படும். போட்டிகள் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலும் ஆணையத்தின் முடிவே இறுதியானது.
போட்டிக்கான தலைப்புகள்:
தமிழ்
1. “செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே”
2. பெரியாரும் அம்பேத்கரும் கண்ட சமூக ஜனநாயகம்
3. கல்விக் கண்திறந்த கர்மவீரர் காமராசர்
4. அறிஞர் அண்ணாவின் “தமிழ்க் கனவு”
5. கலைஞர் கண்ட மாநில சுயாட்சியும், மாநில உரிமைகளும்
6. மீண்டும் அண்ணல் காந்தி அவதரிக்க வேண்டும்!
7. வரலாறு தமிழ்நாட்டில் இருந்து துவங்குகிறது!
8. ஏற்றத்தாழ்வுகள் இல்லாத இந்தியா!
9. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!
10. தமிழ்நாட்டின் தியாகதீபங்களால் சுடர்விட்ட இந்திய விடுதலைப்போர்!
11. இந்தியா நமது தேசம்! மனித நேயம் அதன் சுவாசம்!!
12. நேரு கண்ட மதச்சார்பற்ற இந்தியா
13. என் சமகால இளைஞர்களே..?
14. சமூகநீதி காப்போம். சரித்திரம் படைப்போம்
15. திராவிடம் சொல்லும் பண்பாட்டு நெறி
ஆங்கிலம்:
1. India of My Dreams
2. Save my Mother Earth!
3. Do we need reservation in Judiciary?
4. The Perils of jobless growth
5. Serving Humanity is my Religion
6. Independent Judiciary – The watch Dog of Democracy
7. Freedom of Expression and the civilized society
8. Women Empowerment
9. Social Media -A blessing or a curse?
10. Unity Not Uniformity
11. Freedom of Religion – A basic human Right
12. Social justice vs inequality
13. Dravidian Ethos
14. The roll of State Governments in Economic Development
15. Regional aspirations a must for National progress
தமிழகத்திலுள்ள அனைத்துக் கல்லூரிகளின் தாளாளர்கள், முதல்வர்கள், பேராசிரியப் பெருமக்கள் அனைவரும் ஆணையம் வகுத்துள்ள விதிகளின்படி நடைபெறும் இப்போட்டிகளில் தங்களது நிறுவனங்களின் மாணவ – மாணவியர் சிறப்பாக பங்கேற்க ஏற்பாடு செய்து ஆணையத்தின் முயற்சிகள் வெற்றி பெற தங்களது மேலான ஒத்துழைப்பினைத் தரவேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.