வேலைவாய்ப்பு பெற இளைஞர்கள் எந்த துறைகளில் கவனம் செலுத்தலாம்
ஸ்டாக் டெவலப்பர்ஸ் (Full stack developers):
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஸ்டாக் டெவலப்பர்ஸ்க்கான தேவை அதிகரித்துள்ளது. வலைதளம் உருவாக்குவது முதல் பராமரிப்பு, நிர்வாகம் என அனைத்து பொறுப்புகளையும் கவனிக்க வேண்டும். front-end மற்றும் back-end – ஐ கையாளும் திறமை ஒருவரிடமே இருந்தால், அவருக்கான தேவை, பெருநிறுவனங்களில் கொட்டிக்கிடக்கிறது. ஜாவா, பைத்தான், ராலிஸ் ஆன் ரூபி (Ruby on Rails) உள்ளிட்ட கோடிங் நுட்பத்தில் திறமை வாய்ந்தவராக இருந்தால், நல்ல நிறுவனங்களில் எதிர்பார்க்கும் ஊதியத்துடன் வேலைகள் தயாராக இருக்கின்றன.
செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence):
இந்தியாவில் ஆர்டிபிஸியல் இன்டலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு நிபுணர்களுக்கான தேவை உள்ளது. ஏறத்தாழ 2,500 காலியான Artificial intelligence பதவிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. Artificial intelligence இயந்திரங்களை இயக்குவது, இந்த துறையில் நிபுணத்துவம் பெற்ற அவர்களின் பொறுப்பு ஆகும். மேலும், AI –ன் அல்காரிதம்ஸ் (algorithms), புரோகிராமிங் (programming) ஆகியவற்றை புரிந்துகொண்டு உருவாக்க வேண்டும். 2018 ஆம் ஆண்டு தேசிய செயற்கை நுண்ணறிவு திட்டத்தை அறிமுகப்படுத்திய மத்திய அரசு, கல்வி, விவசாயம், சுகாதாரம் உளிட்ட அனைத்து துறைகளிலும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வளர்ச்சியை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. அதற்கேற்ப, தனியார் மற்றும் அரசு இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுக்க உள்ளனர். இதனால், இந்ததுறை நல்ல வளர்ச்சியை எட்டுவதற்கான வாய்ப்பு உள்ளது.
டேட்டா சயின்டிஸ்ட் (Data scientist):
தரவு அறிவியல் அல்லது தரவு பகுப்பாய்வு என்பது ஒரு நிகழ்வை தரவின் அடிப்படையில் முன்கூட்டியே கணித்து கூறுவதாகும். இதனடிப்படையில், ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகளை முன்கூட்டியே கணித்து அதற்கேற்ப, திட்டங்களை வழிவகுத்து நடைமுறைபடுத்துவதாகும். டெக் உலகில் போட்டி கடுமையாக இருப்பதால், டேட்டா சயின்ட்ஸ்ட் படித்தவர்களின் தேவை அதிகளவு இருக்கிறது. இந்த துறையில் சாதிக்க விரும்புபவர்கள் கணிதம், புள்ளியியல், அட்டவணை மற்றும் காட்சிப்படுத்தல் கருவிகளுடன் பணிபுரிதல், SQL, பைதான் ஸ்கிரிப்டிங் மொழிகளில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸ் (Digital marketers):
ஒரு பிராண்டை சந்தைப்படுத்துவதிலும், பிரபலப்படுத்துவதிலும் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏராளமான பிராண்டுகள், டெக் நிறுவனங்கள் இருப்பதால், அவை தங்களை சந்தைப்படுத்திக்கொள்வதில் டிஜிட்டல் மார்க்கெட்டர்ஸை முழுமையாக சார்ந்திருக்கின்றனர். இதனால், அவர்களின் தேவை தொழில்நுட்ப உலகில் அதிகளவு இருக்கிறது. வித்தியாசமான ஐடியா மற்றும் கிரியேடிவ் திங்கிங் உள்ளவர்கள் இந்த துறையில் சாதிக்க முடியும். குறிப்பாக, எம்.பி.ஏ அல்லது டிஜிட்டல் மார்க்கெட்டிங் முடித்தவர்களுக்கு பிரகாசமான வாய்ப்புள்ளது.
2021 வேலைவாய்ப்பு:
ஐடி நிறுவனங்கள் முழுமூச்சாக டிஜிட்டல் துறையில் முழு கவனத்தையும் செலுத்தி வருகின்றனர். இதனால், தொழில்நுட்ப துறையில் தேர்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் தேவையை அவர்கள் சார்ந்திருக்கின்றனர். இதனால், தற்போது இருக்கும் திறமையை விட, சந்தையின் போக்கு அறிந்து அதற்கேற்ப தங்களின் திறமைகளையும் வளர்த்துக்கொள்பவர்கள் டிஜிட்டல் உலகில் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். ஒரு துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இல்லாமல், பலதுறையில் வல்லுநர்களாக இருப்பவர்களை மட்டுமே நிறுவனங்கள் விரும்புகின்றனர். அதனால், பல்துறை வல்லுநர்களாக உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.