புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகள், ஒருங்கிணைந்த ஐந்தாண்டு படிப்புகள், பிஎச்டி, முதுநிலைப் பட்டயப் படிப்பு உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. நாடு முழுவதும் இருந்து ஏராளமானோர் இங்கு படித்து வருகின்றனர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பல்கலைக்கழகத்தில் சேர நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். வரும் 2021-22ஆம் கல்வியாண்டுக்கான நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடக்க உள்ளது.
இது தொடர்பாகப் பல்கலைக்கழகம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், ”புதுவை மத்தியப் பல்கலைக்கழகம், 2021-2022ஆம் கல்வியாண்டிற்கான பல்வேறு பட்ட மேற்படிப்பு / ஆராய்ச்சித் துறைக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் வரும் 19-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 14 ஆகும். நுழைவுத் தேர்வு செப்டம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழத்தில் உள்ள படிப்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு, தேர்வு முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பார்க்கலாம்.
அதற்கான இணைய முகவரி: www.pondiuni.edu.in
மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவருக்கும் இங்கு இலவசமாகக் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.