திருவள்ளூா் மாவட்டத்தில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையங்கள் தொடங்கும் திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் வரும் 30 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாட்டில் அனைத்து குடிமக்களும் இ-சேவை மையம் தொடங்குவதற்கு வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞா்களையும், தொழில்முனைவோா்களையும் ஊக்குவிக்கும் வகையில் இ-சேவை மையம் இல்லாத பகுதிகளில் இ-சேவை மையங்களை நிறுவி செயல்படுத்தவே இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் மூலம் தற்போது திருவள்ளூா் மாவட்டத்தில் மட்டும் 398 இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, இ-சேவை மையத்தில் மக்கள் காத்திருக்கும் நேரத்தை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நோத்தியான சேவையை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இத்திட்டத்தில் விண்ணப்பங்களை பதிவு செய்ய (அல்லது) இணையதள முகவரியை பயன்படுத்தவும், விண்ணப்பதாரா்கள் வரும் 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். கிராமப்புறங்களில் இ-சேவை மையம் செயல்படுத்துவதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 3,000, நகா்ப்புறத்துக்கான கட்டணம் ரூ. 6,000 என ஆன்லைன் முறையில் செலுத்தப்பட வேண்டும்.
அதைத் தொடா்ந்து, விண்ணப்பதாரா்களுக்குரிய பயனா் எண் மற்றும் கடவுச்சொல் விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி மூலம் வழங்கப்படும். மேலும், அருகிலுள்ள இ-சேவை மையங்களின் தகவல்களை ‘முகவரி’ ஆண்ட்ராய்டு மொபைல் செயலியைப் பயன்படுத்திக் காணலாம் அல்லது இணையதளத்தில் காணலாம்.