உலகப் பொது மறையான திருக்குறளில் உள்ள, 1,330 குறள்களையும் மனப்பாடம் செய்து ஒப்புவிக்கும் திறன் பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு, தமிழ் வளர்ச்சித்துறையால் ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகை, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க, மாணவ, மாணவியரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர், 1,330 திருக்குறளையும் ஒப்புவிக்கும் திறன் பெற்றவர்களாக இருக்க வேண்டும். திருக்குறளில் உள்ள இயல் எண், அதிகாரம், குறள் எண், குறளின் பொருள், திருக்குறளின் அடைமொழி, சிறப்புகள், சிறப்பு பெயர்கள், உரை எழுதியோர் போன்றவற்றை அறிந்திருந்தால், கூடுதல் தகுதியாக கருதப்படும்.
திறனறி குழு முன்னிலையில் நேராய்வுக்கு உட்படுத்தப்பட்டு, பரிசுக்குரியோர் பட்டியல், சென்னை தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனருக்கு, கோவை மாவட்ட துணை இயக்குனரால் பரிந்துரைக்கப்படும். ஏற்கனவே பங்கேற்று பரிசு பெற்றவர்கள், மீண்டும் பங்கேற்க முடியாது.
திருக்குறள் முற்றோதல் விண்ணப்பங்களை, கோவை மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ அல்லது, https://tamilvalarchithurai.tn.gov.in/ என்ற இணைய தளத்தில் பதிவிறக்கமோ செய்து கொள்ளலாம்.
விபரங்களுக்கு, 0422 – 2300 718 என்ற எண்ணுக்கு அழைக்கலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, டிச., 15க்குள் அனுப்ப, கலெக்டர் கிராந்திகுமார் அறிவுறுத்தியுள்ளார்.