சேலம் தலைமை தபால் நிலையத்தில் வரும் 15-ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்ட முகவர்கள் தேர்வுக்கு நேர்காணல் நடக்கிறது.
இதுதொடர்பாக சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் கிழக்கு அஞ்சல் கோட்டத்தில் வரும் 15-ம் தேதி காலை 11 மணிக்கு அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடுகளுக்கான நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் தேர்வுக்கான நேர்காணல் நடக்கிறது.
ஆர்வமுள்ள அனைவரும் வரும் 15-ம் தேதி சேலம் தலைமை தபால் நிலையத்தில் உள்ள சேலம் கிழக்கு கோட்ட அலுவலகத்தில் தங்களின் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் முழு விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 50 வயது வரை உடையவர்கள் பங்கேற்கலாம். ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், முன்னாள் படைவீரர்கள், சுயதொழில் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் அதிகாரிகள் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளில் பணி ஓய்வு பெற்ற அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் விண்ணப் பிக்கும்போது, அதிகாரிகளின் மேல் துறை ரீதியாக எந்தவித ஒழுங்கு நடவடிக்கைகளும் நிலுவையில் இருக்கக் கூடாது. இத்தகுதியுள்ள மத்திய, மாநில அரசு பணி ஓய்வு பெற்றவர்கள் தங்கள் வயது சான்றிதழ், கல்விச் சான்றிதழ், ஆதார் நகல் மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் ஒரு பாஸ்போர்ட் அளவு போட்டோவுடன் வரும் 10-ம் தேதிக்குள் முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர், சேலம் கிழக்கு கோட்டம், சேலம்-636001 என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
தேர்வு பெற்ற நேரடி முகவர்கள், கள அலுவலர்கள் சேலம் மற்றும் ஆத்தூர் பகுதிகளில் பணிபுரிய வேண்டும். ரூ.5 ஆயிரம் வைப்பு தொகை செலுத்த வேண்டும்.மேலும், விவரங்களுக்கும், விண்ணப்பங்களை பெறுவதற்கும் அருகில் உள்ள அஞ்சலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.