சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில், வரும் 15ம் தேதி தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன வளாகத்தில் தொழில் முனைவோர்க்கான விழிப்புணர்வு முகாம் வரும் 15ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் சுயமாக தொழில் தொடங்க விரும்புவோர், முகாமில் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, முனைவோருக்கு அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த முகாமில் விவரிக்கப்படும்.
மேலும், பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபர்களின் பெயர்கள் பெறப்பட்டு அடுத்த கட்ட பயிற்சிக்கு அவர்கள் அழைக்கப்படுவர். அடுத்த கட்டமாக 3 நாள் திட்ட அறிக்கை தயாரித்தல் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்பட்டு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. அதன்படி, மாவட்ட தொழில் மையங்களோடு இணைந்து 5 நாள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சிகளும் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் மூலம் நிதி உதவி பெறும் திட்டங்களில் குறிப்பிட்டுள்ள கட்டாய பயிற்சியிலிருந்து விலக்கு பெறலாம். மேலும், இந்த தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கு ஆர்வமுள்ள நபர்களுக்கு பயன் பெற வழிவகை ஏற்படுத்தி தரப்படும். இந்த பயிற்சி தொடர்பான விவரங்களை அறிய 044-22252081, 22252082, 96771 52265, 8668102600 என்ற எண்ணை தொடர்புக்கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.