தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச ஆங்கில பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி முடித்ததும் அயல்நாட்டில் வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம்.
Overseas job opportunities : தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏழை எளிய மாணவர்கள, ஆதிதிராவிடர்களுக்கு உதவித்தொகை திட்டமும், இலவச பயிற்சி திட்டமும் நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் இலவசமாக மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சியானது அளிக்கப்படவுள்ளது. இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்களை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி (Occupational English Test) அளிக்கப்படவுள்ளது.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்கவேண்டும்.
இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி / எம்.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட் பேசிக் பி.எஸ்.சி நர்சிங், மற்றும் பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இப்பயிற்சியில் பங்கு பெற 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான காலஅளவு இரண்டு மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத் தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
இப்பயிற்சி முடித்தவுடன் தகுதியான நபர்களுக்கு. பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். இப்பயிற்சியில் சேருவதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்து பயன் பெறலாம் என தாட்கோ சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ரஷ்மி சித்தார்த் ஜகடேதெரிவித்துள்ளார்.