இளம் சாதனையாளர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 8, 10ம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலே இந்த ஆண்டிற்கான மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் பிரிவுகளைச் சேர்ந்த முப்பதாயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் 9 , 11 ம் வகுப்பு பயின்று வரும் 3093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் மாணவர்கள் தேசியத் தேர்வு முகமையால் செப்.29 அன்று நடத்தப்படவிருந்த யாசஸ்வி (YASASVI) நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது எழுத்துத் தேர்வானது காலமின்மை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.மேலும், 8, 10ம் வகுப்புகளில் 60 சதவீதம், அதற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற அனைத்து மாணவர்களும் தேசிய கல்வி உதவித்தொகைத் தளத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் எனவும், மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலே இந்த ஆண்டிற்கான தேர்வு நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மத்திய அரசின் சமூகநீதி ,அதிகாரமளித்தல் துறையின் இணையதளத்தினை (http://socialjustice.gov.in) அணுகலாம்.