மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் டிசம்பர் 21 முதல் இலவச பேருந்து பயண டோக்கனை பெறலாம் என மாநகர போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
60 மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் 6 மாதம் வரை பேருந்துகளில் கட்டணமில்லா பயண டோக்கன்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் போது மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்கள் வரும் 21ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டமானது மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கடந்த 20-2-2016 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, அவரது பிறந்த தினமான 24-2-2016 அன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அதனடிப்படையில் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மூத்த குடிமக்கள் 60 வயது நிறைவு மற்றும் இருப்பிடச் சான்று ஆகியவற்றின் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளில் அனுகி, மாதம் ஒன்றுக்கு 10 டோக்கன்கள் வீதம் மூன்று மாதங்களுக்கு பயன் படுத்துகின்ற வகையில் கட்டணமில்லா பயனர் டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன.
மூத்த குடிமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்தில் வாயிலாக, கடந்த 30-1-2021 வரையில், ஏறத்தாழ 3,51,617 நபர்கள் பயன் அடைந்துள்ளார்கள். கடந்த 2020ஆண்டு ஆண்டு மார்ச் திங்களில் ஏற்பட்ட கொரோனா நோய் தொற்று காரணமாக அத்தியாவசிய பணிகள் தவிர பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டன, நோய்களின் தீவிரத்தை கட்டுப்படுத்துகின்ற வகையில் 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டிலேயே இருத்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் அரசால் விதிக்கப்பட்டன.
கொரோனா கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பின்னர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் பொருட்டு அவர்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் வழங்கிட அதிமுக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து மீண்டும் டோக்கன்கள் வழங்கப்பட்டன. மாதம் ஒன்றுக்கு 10 வீதம் கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை ஆறு மாதங்களுக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன.
திமுக அரசு ஆட்சிக்கு வந்த உடன் மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் மகளிர் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் இலவச பஸ் டோக்கன்கள் வழங்கப்படும் என மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திகுறிப்பில், “மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னைவாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில், கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள் டிசம்பர் 2022 (அரையாண்டிற்கு ஒரு முறை) வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது, அடுத்த அரையாண்டிற்கு ஜனவரி 2023 முதல் ஜூன் 2023 வரை பயன்படுத்தக்கூடிய, ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம், 6 மாதங்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன்கள், அடையாள அட்டை புதுப்பித்தல், புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை கீழ்காணும் 40 மையங்களில், வரும் 21 டிசம்பர் 2022 முதல் 31 ஜனவரி 2023 வரை காலை 08.00 மணி முதல் இரவு 07.30 மணி வரை வழங்கப்படும். அதன் பின்னர், 01.02.2023 முதல் அந்தந்த பணிமனை அலுவலகத்தில், அலுவலக நேரத்தில் வழங்கப்படும்.
சென்னைவாழ் மூத்த குடிமக்கள், இத்தகைய கட்டணமில்லா பயண டோக்கன்கள் மற்றும் அடையாள அட்டைகள் புதியதாக பெறுவதற்கு இருப்பிட சான்றாக குடும்ப அட்டையின் நகலுடன், வயது சான்றாக ஆதார் அட்டை / ஓட்டுநர் உரிமம் / கல்வி சான்றிதழ் / வாக்காளர் அடையாள அட்டையின் நகல் மற்றும் 2 வண்ண பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
சம்மந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்திட ஏதுவாக அவற்றின் அசலை கையில் வைத்திருக்க வேண்டும், மேலும், புதுப்பிக்க வரும் மூத்த குடிமக்கள், தங்களது முந்தைய கட்டணமில்லா பயண அடையாள அட்டையுடன் தற்போதைய பாஸ்போர்ட் அளவிலான ஒரு புகைப்படம் மட்டும் கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.