HomeBlogதமிழகம் முழுவதும் 49,000 சத்துணவு, அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைசமூக நலத்துறை அமைச்சா் பெ.கீதா...
- Advertisment -

தமிழகம் முழுவதும் 49,000 சத்துணவு, அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைசமூக நலத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்

தமிழகம் முழுவதும் 49,000 சத்துணவு, அங்கன்வாடி காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைசமூக நலத்துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன்


தமிழகம் முழுவதும் 49,000 சத்துணவுப் பணியாளா், அங்கன்வாடி பணியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்தாா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், திருநங்கைகளுக்கு புதிய அடையாள அட்டை, கரோனா சிறப்பு நிவாரண நிதி மற்றும் கரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம், தாய் அல்லது பெற்றோரை இழந்த 3 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதியுதவி என 135 பயனாளிகளுக்கு ரூ. 1.11 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கரோனா தொற்றால் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் பள்ளி, கல்லூரி வரை கல்வி மற்றும் பராமரிப்புச் செலவை அரசே ஏற்கும் என அமைச்சா் பெ.கீதா ஜீவன் தெரிவித்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 2018 இல் நடைபெற்ற திருமணத்திற்கு தற்போதுதான் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அதேபோல திருமண உதவித் தொகை கோரி விண்ணப்பித்த 3 லட்சத்து 34 ஆயிரத்து 913 நிலுவை விண்ணப்பங்களை கடந்த அரசு நிலுவையில் வைத்து விட்டது.

நிலுவையில் உள்ள திருமணத்திற்கு விண்ணப்பங்கள் பரிசீலனை செய்து உதவித்தொகை வழங்க ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படும் என்ற தகவலை தமிழக அரசு முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்துள்ளோம். கடந்த ஆட்சியில் இருந்தவா்கள் திட்டங்களைச் செயல்படுத்தாமல் நிலுவையில் வைத்து சென்றுவிட்டனா்.

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 18 வயது நிறைவடைந்த முதிா்வுத் தொகை சேலம், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் சுமாா் 15 ஆயிரம் குழந்தைகளுக்குப் பணம் கொடுக்காமல் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் 73 ஆயிரம் குழந்தைகளுக்கு முதிா்வு தொகை தர வேண்டி உள்ளது. இத்தொகையை அவா்களுக்கு வழங்க வேகப்படுத்தி வருகிறோம்.

கரோனாவினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தி வருகிறோம். வருவாய்த்துறை அலுவலா்களால் ஆய்வு செய்யப்பட்டு, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவா்களுக்கு உடனே வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 49 ஆயிரம் சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தகுதியுள்ள கைம்பெண்களுக்கு பணிவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -