இளம் விஞ்ஞானிகளை கண்டறிய தேசிய அளவில் அறிவியல் திறனறித் தேர்வு நவம்பர் 27, 30 தேதிகளில் நடைபெற உள்ளது என்று புதுச்சேரி வித்யார்த்தி விஞ்சான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுச்சேரி வித்யார்த்தி விஞ்சான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் கூறியதாவது: ‘‘இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்.சி.இ.ஆர்.டி (NCERT, GOVT.OF INDIA) இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை கடந்த 8 ஆண்டுகளாக நடத்தி வருகிறது.
இத்தேர்வு தேசிய அளவில், நவம்பர், 27 மற்றும் 30-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. தேர்வுகளை, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்தபடியே, ஸ்மார்ட் போன், டேப்லெட், லேப்டாப் மற்றும் கணிணி மூலம் பங்கேற்கலாம்.
நடப்பாண்டில் தேர்வு ‘திறந்த புத்தக முறையாக’ மாற்றப்பட்டுள்ளது. ஆங்கிலம் உட்பட அனைத்து பிராந்திய மொழிகளிலும் (தமிழ், மலையாளம்) மாணவர்கள் தேர்வு எழுத வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வில் பங்கேற்கலாம்.
தேர்வு 1.30 மணி நேரம் நடக்கிறது. தேசிய அளவில் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு தேசிய அளவில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவு பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிவியல் ஆய்வில் பங்கேற்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுறது.
தேர்வுக்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு அறிவியல் அறிஞர்களுடன் அல்லது ஆராய்ச்சியாளருடன் தேர்வுக்கு சிறப்பாக தயார் செய்வதற்கு வழிகாட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.vvm.org.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பள்ளிகளும் தங்கள் மாணவர்கள் பதிவுகளை மேற்கொள்ளலாம். தேர்வு குறித்த கூடுதல் தகவல்களை பெற, வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் மற்றும் மணிகண்டன் ஆகியோரை 9443190423 மற்றும் 9894926925 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்துகொள்ளலாம்.
பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபட வழிகாட்டவும், தேசிய அளவில் உள்ள உயர்கல்வி மையங்களின் விவரம் அறியவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக நிச்சயம் இருக்கும். இந்த தேர்வில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் பகுதி மாணவர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடம் உரையாடுவதற்கும், அவர்களுடன் ஆராய்ச்சியில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தருகிறது. ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும் என்கிற நிலையை இப்போது பிராந்திய மொழிகளில் எழுதும் விதமாக மாற்றியிருக்கிறோம். தேர்வுக்கு முன்னர் நவம்பர் 1-ம் தேதி முதல் மாதிரித் தேர்வுகளை மாணவர்கள் கலந்துகொண்டு தன்னம்பிக்கையும் தெளிவும் பெறலாம். இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக். 20 கடைசி நாளாகும்.’’என்றார்.