திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பழங்கரை டீ பப்ளிக் பள்ளி வளாகத்தில் இன்று முதல் அக்டோபர் 1ம் தேதி வரை அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவ வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்லாம்.
இந்திய ராணுவத்தின் முப்படைகளில் வீரர்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. இந்த திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் நபர்கள் ‘அக்னி வீரர்கள்’ என அழைக்கப்படுவர்.
இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் ராணுவ பணியில் இருப்பர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வீரர்கள் வரை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான வீரர்கள் தேர்வு நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அக்னிபத் திட்டத்தின்கீழ் ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் திருச்சி மண்டலம் சார்பில் நாகர்கோவிலில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் 1-ந்தேதி வரை நடைபெற்றது.
இதில் திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 17 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் மண்டலம் சார்பில் நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், மதுரை, நாமக்கல், தேனி ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து வீரர்களை தேர்வு செய்யும் முகாம் அவிநாசி அருகே உள்ள பழங்கரை ‘டீ பப்ளிக்’ பள்ளி வளாகத்தில் இன்று 20-ந்தேதி முதல் வருகிற அக்டோபர் 1-ந்தேதி வரை நடைபெறுகிறது.
தினமும் 3000 பேர் நேர்முகத்தேர்வில் பங்கேற்க உள்ளனர். முதல் நாள் முகாம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கியது. இதில் திருப்பூர், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் நேற்று இரவே பழங்கரை டீ பப்ளிக் பள்ளி முகாம் முன்பு வந்து குவிந்தனர்.
முன்னதாக அவர்கள் தேர்வு நடைபெறும் முகாமுக்கு செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வீரர்களை தேர்வு செய்ய 100க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வந்துள்ளனர்.மேலும் கர்னல், பிரிகேடியர், மேஜர், சுபேதார் மேஜர் அந்தஸ்திலான ராணுவ அதிகாரிகள் சிலரும் வந்துள்ளனர். இவர்கள் தகுதியான வீரர்களை தேர்வு செய்கின்றனர்.
தேர்வுக்கு வருகை தரும் இளைஞர்கள் அமர வசதியாக பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கப்பட்டு உள்ளது. குடிநீர் வசதி உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது. இன்று தொடங்கிய ஆள் சேர்ப்பு முகாம்வருகிற 1-ந்தேதி வரை 12 நாட்கள் நடக்கிறது.
எனவே வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்களுக்கு வசதியாக பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. கலெக்டர் வினீத் உத்தரவின்பேரில் வருவாய்த்துறையினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். தேர்வில் பங்கேற்கும் இளைஞர்களுக்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 6மணி வரை உடல் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்வு செய்யப்படுபவர்கள் 1600 மீட்டர் தூரம் ஓட வேண்டும். ஓடுதளம் 400 மீட்டர் நீளம் கொண்டதாகும்.இதனால் வீரர்கள் 4 முறை சுற்றி வரவேண்டும். அதன்பின்னர் பெயர், சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்படுகிறது. முகாம் நடைபெறும் அவினாசி டீ -பப்ளிக் முன் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தினமும் ஒவ்வொரு இரண்டு மாவட்டங்களை சேர்ந்த ராணுவீரர்கள் கலந்து கொள்கின்றனர். இன்று நள்ளிரவு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கின்றனர்.